Wednesday, March 12, 2014

பள்ளிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் விநியோகம்

 கடலூர் மாவட்டத்தில், இயங்கும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு 2014-15ம் கல்வியாண்டிற்குத் தேவையான இலவச பாட புத்தகங்கள் படிப்படியாக வந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல், பிளஸ் 2 வரை, பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் இலவச பாடபுத்தங்கள் தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2014-2015ம் கல்வியாண்டிற்கு தேவையான புத்தகங்கள் சென்னை, சிவகாசி, ஹைதராபாத் என பல்வேறு இடங்களில் அச்சிடப்பட்டு அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கடலூர் மாவட்டத்தில், கடலூர் மற்றும் விருத்தாசலம் என, இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இரு கல்வி மாவட்டங்களிலும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் நடுநிலை, தொடக்கப் பள்ளிகள் 1,434ம், 286 மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன.
ஒன்று முதல், 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடபுத்தகங்கள் கடலூர் தொடக்கக் கல்வி அலுவலகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. இதேப்போன்று, ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பயிலும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான பாட புத்தகங்கள் முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு, பள்ளிகளுக்கு விநியோகிக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "2014-15ம் கல்வியாண்டிற்கு தேவையான பாட புத்தகங்கள் வந்து கொண்டிருக்கிறது. தேர்வுகள் முடிந்து மீண்டும் பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவ, மாணவிகளுக்கு உடனடியாக புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்காக, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் வாகனங்கள் மூலம் விநியோகிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது" என்றார்.

No comments:

Post a Comment