Wednesday, October 2, 2013

முதுகலை தமிழ் தேர்வு ரத்து எதிரொலி: டி.ஆர்.பி., நாளை அவசர ஆலோசனை

முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வை ரத்து செய்து, உயர் நீதிமன்றம், மதுரை கிளை உத்தரவிட்டிருப்பதை அடுத்து, டி.ஆர்.பி., அதிகாரிகள், நாளை காலை ஆலோசனை நடத்துகின்றனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஜூலை, 21ல், போட்டித் தேர்வை நடத்தியது. 1.67 லட்சம் பேர், தேர்வை எழுதினர். இதில், அதிகபட்சமாக, தமிழ் பாட தேர்வை, 33,237 பேர் எழுதினர். விடைத்தாள்கள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு, தேர்வுப் பட்டியலை வெளியிட, டி.ஆர்.பி., தயாரான நிலையில், தமிழ்பாட கேள்வித்தாளில், 47 கேள்விகள், பிழையுடன் இருந்ததாக கூறி, மதுரையைச் சேர்ந்த ஒரு தேர்வர், உயர் நீதிமன்றம், மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. சர்ச்சைக்குரிய தமிழ் பாட தேர்வை, ரத்து செய்து, புதிதாக, வேறு தேர்வை நடத்த கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, கோர்ட் தீர்ப்பின்படி, தமிழ் பாட தேர்வர்களுக்கு, புதிய தேர்வை நடத்துவதா, அல்லது, மேல் முறையீடு செய்வதா என்பது குறித்து விவாதிக்க, டி.ஆர்.பி., அதிகாரிகள், நாளை ஆலோசனை நடத்துகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து, தமிழக அரசின் ஆலோசனையை பெற்று, அதனடிப்படையில், முடிவு எடுக்கப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. டி.ஆர்.பி., எந்த முடிவை எடுத்தாலும், முதுகலை தமிழ் ஆசிரியர் பணி நியமனம், தள்ளிப்போகும். பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், பாதிக்காத வகையில், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும், தற்போதைய சூழல் காரணமாக, தமிழ் ஆசிரியர் நியமனம், தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment