Monday, January 27, 2014

பிளஸ் 1ல் தொடரும் பழைய பாடத்திட்டம்: அதிகாரிகள் மெத்தனம்

பிளஸ் 1 வகுப்புக்கு, புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணியில், அதிகாரிகள் மெத்தனமாக உள்ளதால், வரும் கல்வியாண்டில், மீண்டும் பழைய பாடத்திட்டமே தொடர்வது உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில், பிளஸ் 2 வகுப்புக்கான, பாடத்திட்டத்தை மாற்றியமைத்து பல ஆண்டுகளாகி விட்டதால் இரு ஆண்டுகளுக்கு முன் புதிய பாடத்திட்டம் அமல்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. ஆனால் அதன்பின், பாடத்திட்டம் எழுதும் ஆசிரியர் குழு அமைப்பது உள்ளிட்ட பணிகள் துவங்கப்படவில்லை. இன்னும், நான்கு மாதங்களில் அடுத்த, கல்வியாண்டு துவங்கிவிடும்; அதற்குள், புதிய பாடத்திட்ட புத்தகங்கள் தயாராவது கடினம்.
எனவே வரும் கல்வியாண்டிலும், மீண்டும் பழைய பாடத்திட்டமே தொடர்வது உறுதியாகி உள்ளது. வரும் கல்வியாண்டில் 10ம் வகுப்பில் முப்பருவக் கல்வி முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை அமல்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பின் அதை பிளஸ் 1 வகுப்புக்கும் விரிவாக்கம் செய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது: வரும் கல்வியாண்டில், 10ம் வகுப்புக்கான, முப்பருவக்கல்வி முறை அமல்படுத்தப்படுமா என்பதே சந்தேகமாக உள்ளது. அதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வந்தாலும், பொதுத் தேர்வு என்பதால் மதிப்பீடு செய்வதில் குளறுபடி வருமோ என்ற அச்சம் ஆசிரியர்களிடம் ஏற்பட்டுள்ளது. எனவே, 10ம் வகுப்புக்கு முப்பருவக்கல்வி முறையை சிக்கல் இல்லாமல், அமல்படுத்துவதில் மட்டுமே அதிகாரிகள் கவனமாக உள்ளனர்.
பிளஸ் 1 பாடத்திட்டம் குறித்து யோசிக்கும் நிலையில் இல்லை. கடந்த முறை, சமச்சீர் கல்வி புத்தகம் வழங்கப்பட்ட அடுத்த ஆண்டே மீண்டும் முப்பருவக்கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. இதே போன்று அமையாமல் 10ம் வகுப்பு முப்பருவக்கல்வி முறையை நல்ல முறையில் அமல்படுத்திய பின் அடுத்த கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்புக்கும் அதே பாணியில் பிளஸ் 2 வகுப்புக்கும் முப்பருவக் கல்வி முறையை மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் வரும் கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்புக்கு பழைய பாடத்திட்டமே தொடர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment