Wednesday, January 15, 2014

டி.ஆர்.பி., உத்தரவால் டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர்கள் அதிருப்தி

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஜன.,20ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ள நிலையில், இளங்கலை பட்டப் படிப்பில், செமஸ்டர் வாரியாக மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய உத்தரவால் தேர்ச்சி பெற்றவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு, ஆக.,17 மற்றும் 18ம் தேதிகளில் நடந்தன. இதில், தாள் ஒன்றில் 12,596 பேரும், தாள் 2ல் 14496 பேரும் தேர்ச்சி பெற்றனர். வினாக்கள் தெளிவாக இல்லாததால் ஏற்பட்ட குழப்பம் அடிப்படையில், பலர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். இதன் விளைவாக, திருத்தியமைக்கப்பட்ட மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டது.
இதில் தாள் 2ல், இரண்டாயிரத்திற்கும் மேல் கூடுதலாக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர். இவர்களை லோக்சபா தேர்தலுக்கு முன் பணிநியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து ஜன.,20ல் சான்றிதழ் சரிபார்ப்பை அறிவித்தது.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் 2ல் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பின்போது, சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்களாக, "இளங்கலை பட்டப்படிப்பில், பல்கலை, கல்லூரிகள் வழங்கிய, செமஸ்டர் வாரியான மதிப்பெண் சான்றிதழ்களையும், பட்டப்படிப்பு சான்றுடன் சமர்ப்பிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் "சான்றிதழ் சரிபார்ப்பின் போது அளிக்கப்படாத சான்றுகள் அதற்குப்பின் ஏற்கப்படமாட்டாது" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை அரசு பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் பட்டப் படிப்பின் தொகுப்பு மதிப்பெண் சான்று மட்டுமே கேட்கப்பட்டது. தற்போது செமஸ்டர் வாரியாக மதிப்பெண் சான்று கேட்டு, டி.ஆர்.பி., அதிர்ச்சி ஏற்படுத்தியது. 1980 மற்றம் 1990களில் ரெகுலர் அல்லது தொலை நிலைக் கல்வியில் பட்டம் பெற்றோர், 80 சதவிகிதத்திற்கும் மேல் இதுபோன்ற செமஸ்டர் வாரியான மதிப்பெண் சான்றுகளை வைத்திருக்க வாய்ப்பில்லை. டி.ஆர்.பி.யின் இந்த உத்தரவு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்றவர்கள் கூறியதாவது: பொதுவாக அரசுப் பணிகளுக்கும் டிகிரி சான்று மற்றும் மதிப்பெண் சான்று மட்டும் கேட்பது வழக்கம். கடந்த டி.இ.டி., தேர்வுகளில், தேர்ச்சி பெற்றவர்களுக்கும் இதே வழக்கம் தான் கடைபிடிக்கப்பட்டது. தற்போது செமஸ்டர் வாரியாக மதிப்பெண் சான்றுகள் கேட்கப்பட்டுள்ளன, குழப்பமாக உள்ளது. 6வது செமஸ்டருக்கான சான்றே வழங்க மாட்டார்கள்.
"டூப்ளிகேட்" சான்றிதழ் கேட்டு, கல்லூரிக்கு சென்றால் சம்பந்தப்பட்ட பல்கலையில் கேளுங்கள் என்கின்றனர். பல்கலைக்கு சென்றால், மீண்டும் அந்த சான்றிதழ் வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட சான்றிதழின் ஜெராக்ஸ் வேண்டும். ஒரு செமஸ்டர் சான்றுக்கு ரூ.3 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். சான்று காணாமல் போனதாக போலீஸ் எப்.ஐ.ஆர்., வேண்டும் என ஒரு மாதத்தில் நடக்க சாத்தியமில்லாத வழிகளை கூறுகின்றனர். தேர்ச்சி பெற்றும் நிம்மதி இல்லை. அரசு இப்பிரச்னையில் தலையிட்டு, தெளிவுபடுத்த வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment