Wednesday, January 29, 2014

25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை: மெட்ரிக் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை

இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ் மெட்ரிக் பள்ளிகள் அனைத்தும் ஆரம்பநிலை சேர்க்கையில் 25 சதவீத இடங்களை ஏழை, எளிய பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும். வரும் கல்வி ஆண்டில் இதை கடைபிடிக்காத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் பிச்சை எச்சரித்து உள்ளார்.

ஆர்.டி.இ. சட்டத்தின்படி மாணவர் சேர்க்கை நடக்கும் ஆரம்ப நிலை வகுப்புகளில் (எல்.கே.ஜி., அல்லது முதல் வகுப்பு) மொத்தம் உள்ள இடங்களில் 25 சதவீதத்தை பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும். இவர்களுக்கான கல்விச் செலவை மத்திய அரசே ஏற்கிறது.
கடந்த ஆண்டு 20 ஆயிரம் குழந்தைகள் இந்த ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ந்தனர். எனினும் 650க்கும் அதிகமான தனியார் பள்ளிகள் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை.
இது குறித்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் பிச்சை கூறியதாவது: வரும் கல்வி ஆண்டில் இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என, அனைத்து பள்ளிகளுக்கும் இப்போதே சுற்றறிக்கை அனுப்பி உள்ளோம். ஆர்.டி.இ. ஒதுக்கீட்டின் கீழ் வரும் இடங்கள் அனைத்தையும் முறையாக தகுதி வாய்ந்த குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும் என, தெரிவித்து உள்ளோம். இதை, முறையாக கண்காணிக்க வேண்டும் என, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு முதல் முறையாக இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை நடந்தது. அதனால் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டோம். ஆனால், வரும் கல்வி ஆண்டில் அதுபோல் விட மாட்டோம். இட ஒதுக்கீட்டை அமல்படுத்ததாத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, பிச்சை கூறினார்
.தனியார் பள்ளி நிர்வாகிகள் சிலர் கூறுகையில், "கடந்த ஆண்டுக்கான கட்டணமே இன்னும் அரசிடம் இருந்து வரவில்லை. 35 கோடி ரூபாய் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். கேட்டால் "மத்திய அரசிடம் இருந்து இன்னும் நிதி வரவில்லை" என, அதிகாரிகள் கூறுகின்றனர். கட்டணம் இல்லாமல், மாணவர்களை சேர்த்துவிட்டால் பள்ளியை எப்படி நடத்த முடியும்? கட்டணத்தை முதலில் வழங்கிவிட்டு அதன்பின் எச்சரிக்கை விட்டால் சரியாக இருக்கும்" என்றனர்.
இதுகுறித்து இயக்குனரிடம் கேட்டதற்கு "நிதி, விரைவில் வந்துவிடும்" என்றார்.

No comments:

Post a Comment