Wednesday, January 29, 2014

அடிக்கடி கேட்கப்படும் புள்ளி விபரம்: மாணவர்கள் தேர்ச்சி குறையும் அபாயம்

மாணவர்களின் புள்ளி விவரங்களை அடிக்கடி கேட்பதால் கற்பிக்கும் ஆசிரியர்கள், தகவல் சேகரிப்பில் நாட்களை கடத்தும் நிலை உள்ளது. இதனால், அரசு தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதை தடுக்க இதற்கென தனி பிரிவை ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்று முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான புள்ளி விவரத்தை, அனைவருக்கும் கல்வி இயக்கம் அடிக்கடி கேட்கிறது. ஒன்பது முதல் பிளஸ் 2 வரை ஆர்.எம்.எஸ்.ஏ., இயக்கம் கேட்கிறது. கடந்த இரு ஆண்டுகளாக மாணவர்களின் கல்வித்தரம், கல்வி உதவிதொகை, விளையாட்டு ஆர்வம் போன்ற தகவலை பலமுறை அனுப்பியும், மீண்டும் கேட்பதால், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் "டென்ஷன்" ஆகின்றனர்.
அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, தற்போது ஒவ்வொரு நாளும் முக்கிய நாட்களாக இருப்பதால், பல பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை ஆசிரியர்கள் நடத்துகின்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, நாட்களை எண்ணி, திட்டமிட்டு செயல்படுகின்றனர். இந்நிலையில், கேட்ட தகவலையே மீண்டும் கேட்பதால், அதை தயாரிக்கும் போது, கற்பிக்கும் பணியில் இருந்து ஆசிரியர்கள் விலகுகின்றனர். மாணவர்களின் கவனமும் சிதறும் நிலை உள்ளது. இதனால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறையும் அபாயம் உள்ளது.
பள்ளிகளில் நலதிட்டம் என்ற தனிப்பிரிவு ஏற்படுத்தினால், ஆசிரியர்கள் கற்பிப்பதில் இருந்து விலக மாட்டார்கள், மாணவர்களின் கவனமும் சிதறாமல் இருக்கும். இதற்கான ஏற்பாடை கல்வித்துறை உயர் அதிகாரிகள் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment