Thursday, January 23, 2014

செமஸ்டர் வாரியாக மதிப்பெண் சான்று கட்டாயமில்லை: டி.ஆர்.பி.

ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) தாள் 2ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு, "செமஸ்டர்" வாரியாக மதிப்பெண் சான்றிதழ்கள் கட்டாயமில்லை" என ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பி.எட்., பட்டதாரிகளுக்கு ஜன.,23 மதியம் முதல் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடக்கிறது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு டி.ஆர்.பி., யால் அனுப்பப்பட்ட உத்தரவில் "சான்றிதழ் சரிபார்ப்பின் போது, பட்டப் படிப்பின் "செமஸ்டர்" வாரியான மதிப்பெண் சான்றிதழ்கள் கொண்டு வரவேண்டும்" என நிபந்தனை விதிக்கப்பட்டது.
வழக்கமாக அரசு பணி நியமனங்களுக்கு, "டிகிரி" சான்று மற்றும் இறுதி மதிப்பெண் சான்றிதழ்களே கேட்கப்படும். "செமஸ்டர்" வாரியான மதிப்பெண் சான்று இதுவரை கேட்டதில்லை. டி.இ.டி.,யில் இதுவரை தேர்வு செய்யப்பட்டவர்களிடமும் இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டது.
ஆனால், தற்போது டி.ஆர்.பி.யால் பிறப்பிக்கப்பட்ட, புதிய உத்தரவால் டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்றோர் பல்கலைகளில், "செமஸ்டர்" வாரியான மதிப்பெண் சான்றிதழ் கேட்டு குவிந்தனர். "காணவில்லை" என போலீசில் புகார் செய்து நாளிதழ்களில் விளம்பரம் செய்து, பின் பல்கலைகளில் 3,000 ரூபாய் வீதம் கட்டணம் செலுத்தினால் மட்டுமே "டூப்ளிகேட்" செமஸ்டர் மதிப்பெண் சான்றிதழ்கள் பெறும் நிலை இருந்தது. இதுகுறித்து டி.ஆர்.பி.,க்கு புகார்கள் சென்றன.
இதன் அடிப்படையில், "சான்றிதழ் சரிபார்ப்பில் செமஸ்டர் வாரியான மதிப்பெண் சான்றிதழ்கள் கேட்பதை கட்டாயப்படுத்த வேண்டாம்" என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரையில் கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர்களின், "10+2+3" என்ற ஆர்டரில் ஆண்டுகள் மாறியிருக்கும் பட்சத்தில்தான் "செமஸ்டர்" வாரியான மதிப்பெண் சான்றுகள் தேவைப்படும். முறையான ஆர்டரில் படித்து சான்றிதழ் பெற்றவர்களுக்கு டிகிரி மற்றும் இறுதி மதிப்பெண் சான்றிதழ்கள் போதுமானது" என்றார்.
டி.ஆர்.பி.,யின் இந்த உத்தரவால், ஜன.,23ல், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கும் பட்டதாரிகள், நிம்மதி தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment