Friday, January 31, 2014

"மாநில வேலைவாய்ப்பு இணையதளம் துவக்கப்படும்"

தமிழக சட்டசபை கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் நேற்று துவங்கியது. "பொருளாதாரத்திற்கு ஊக்கம் அளிக்க, 2014 15ம் ஆண்டிற்கான, திட்டச் செலவின இலக்கு 42,185 கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்தப்படும். வேலை தேடுவோரையும், வேலைவாய்ப்பு அளிப்போரையும், இணைக்கும் தளமாக மாநில வேலைவாய்ப்பு இணையதளம் துவக்கப்படும்" என கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் நேற்று பகல் 12:00 மணிக்கு கவர்னர் ரோசய்யா உரையாற்றினார்.
உரையின் சிறப்பம்சம்: இலங்கையில் உள்ள சிறுபான்மை தமிழர்களுக்கு உரிமைகளை பெற்றுத் தர, இந்த அரசு உறுதியான ஆதரவை தொடர்ந்து அளிக்கும்.
வளர்ச்சி விகிதம், 2013-14ல் மேம்பட்டு, 5 சதவீதத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதாரத்திற்கு ஊக்கம் அளிக்க, 2014 15, திட்டச் செலவின இலக்கு 42,185 கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்தப்படும்.
மாநிலத்தின் உணவு தானிய உற்பத்தி, 100 லட்சம் டன் அளவை 2013-14ல் மிஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலை தேடுவோரையும், வேலைவாய்ப்பு அளிப்போரையும் இணைக்கும் தளமாக மாநில வேலைவாய்ப்பு இணையதளம் துவக்கப்படும். இதில், வேலைவாய்ப்பு ஆலோசனைகள், பயிற்சிகள் மற்றும் பணியமர்வு உதவிகள் குறித்த தகவல்கள் வழங்கப்படும்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கத்திற்காக, சர்வதேச நிதி நிறுவனங்களிடம் இருந்து, நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை, நம் மாநிலம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
நகர்ப்புற கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், திட்டங்களை செயல்படுத்தும், திறனை உயர்த்தவும், "தமிழ்நாடு நிலைக்கத்தக்க நகர்ப்புற வளர்ச்சி திட்டம்"  செயல்படுத்த, உலக வங்கியிடம் நிதி கோரப்பட்டுள்ளது.
சென்னை, வண்ணாரப்பேட்டையில் இருந்து, திருவொற்றியூர் செல்லும் மெட்ரோ ரயில் வழித் தடத்திற்கு மத்திய அரசிடம் இருந்து, விரைவில் ஒப்புதல் பெறவும், திட்டத்தின் 2ம் கட்டத்திற்கான புதிய வழித்தடங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யவும், அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இவ்வாறு, கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment