Sunday, January 19, 2014

டி.ஆர்.பி., உத்தரவால் பட்டதாரிகள் பரிதவிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பின் போது, பருவத்தேர்வு வாரியாக மதிப்பெண் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்" என ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) உத்தரவிட்டுள்ளதால், பல்கலைகளுக்கும், கல்லூரிகளுக்கும் அலைந்து தவிக்கின்றனர்.

கடந்தாண்டு ஆகஸ்ட் 17, 18ம் தேதிகளில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு ஜன., 20 முதல் 27 வரை அந்தந்த மாவட்டங்களில் நடக்கிறது. "தாள்-2ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், கல்லூரியில் படித்த போது வழங்கப்பட்ட "செமஸ்டர்" வாரியான சான்றிதழ்களை, கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்" என டி.ஆர்.பி., உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக பணிநியமனத்திற்கு டிகிரி சான்றிதழும், இறுதி மதிப்பெண் சான்றும் சமர்ப்பிக்கப்படும். இதனால் "செமஸ்டர்" வாரியான மதிப்பெண் சான்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தற்போது டி.ஆர்.பி.,யின் உத்தரவால் தேர்ச்சி பெற்றவர்கள் பல்கலைகளுக்கும், கல்லூரிகளுக்கும் அலைந்து, சான்றிதழ்களை கேட்ட வண்ணம் உள்ளனர். கல்லூரிகள், பல்கலையையும்; பல்கலைகள், அந்தந்த கல்லூரிகளையும் கைகாட்டுவதால், சான்று பெற முடியாமல் தேர்ச்சி பெற்றவர்கள் தவிக்கின்றனர்.
கல்லூரியில் அல்லது தொலைநிலைக் கல்லூரியில் படித்த போது "முடிவு நிறுத்தி வைப்பு" (வித் ஹெல்டு) அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த பாடத்திற்கான சான்று, பலருக்கு அனுப்பப்படவில்லை. இதுகுறித்து பல்கலைகள், "கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என பதில் கூறுகின்றன.
கல்லூரிகளில் கேட்டால், "பல்கலையில் இருந்து அதுபோன்ற சான்றிதழ்கள் வரவில்லை" என கூறுகின்றனர். "பல்கலையால் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படவில்லை" என்ற சான்றும், தேர்ச்சி பெற்றவர்களுக்கு கல்லூரிகள் தர மறுக்கின்றன. இதனால் சான்றிதழ் சரிபார்ப்பில் 90 சதவீதத்திற்கும் மேல், "செமஸ்டர்" வாரியாக சான்றிதழ்கள் சமர்ப்பிக்க முடியாத நிலை உள்ளது.
"புதிய உத்தரவை, டி.ஆர்.பி., மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என தேர்ச்சி பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர். புதிய உத்தரவிற்கு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மாவட்டத் தலைவர் நாகசுப்பிரமணி, செயலாளர் முருகன் கூறியதாவது:
டி.ஆர்.பி.,யின் இந்த உத்தரவு தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தும். அனைத்து அரசுத் துறைகளில் அடுத்து எந்த பணியிடங்களுக்கு, இதுபோன்று "செமஸ்டர்" வாரியான சான்றிதழ்கள் கோரப்படுமா என தெரியவில்லை. கடந்த இரண்டு முறை நடந்த டி.இ.டி., தேர்வுகளிலும், தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பு போல, இம்முறையும் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.

No comments:

Post a Comment