Thursday, January 23, 2014

கல்வித்துறை ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே வாக்குவாதம்

திண்டுக்கல்லில் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழை சரிபார்க்கும் குழுவில் இடம்பெறுவது தொடர்பான பிரச்னையில் கல்வித்துறை ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், சான்றிதழ் சரிபார்க்கும் பணி தாமதமாக துவங்கியது.

ஆசிரியர் தகுதித்தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 1,242 பேர் தேர்ச்சி அடைந்தனர். தேர்ச்சி அடைந்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு திண்டுக்கல் புனித லூர்து அன்னை பள்ளியில் நடந்து வருகிறது.
முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் தலைமையில் எட்டு குழுக்கள், சான்றிதழ்களை சரிபார்த்து வருகின்றனர். தினமும் 192 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று கல்வித்துறை அலுவலக கண்காணிப்பாளர்கள் சான்றிதழ் சரிபார்க்கும் இடத்திற்கு வந்தனர்.
பின், சான்றிதழ் சரிபார்க்கும் குழுவில் கண்காணிப்பாளர்களுக்கு பதிலாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமித்ததற்கு முதன்மைக்கல்வி அலுவலர் சுகுமார் தேவதாசிடம் கண்டம் தெரிவித்தனர்.
இதையடுத்து, நான்கு குழுவில் கண்காணிப்பாளர்களும், நான்கு குழுவில் முதுகலை ஆசிரியர்களை நியமிப்பதாக முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார். இதற்கு, முதுகலை ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கண்காணிப்பாளர்களுக்கும், முதுகலை ஆசிரியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின், கண்காணிப்பாளர்கள் வெளியேறிசென்றனர்.
தொடர்ந்து, முதுகலை ஆசிரியர்கள் கொண்ட குழு மூலம் சான்றிதழ் சரிபார்க்கும் பணி துவங்கியது. இப்பிரச்னையால் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வந்தவர்கள் வெகுநேரம் காத்திருந்தனர்.

No comments:

Post a Comment