Wednesday, January 29, 2014

உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் குளறுபடி: முழுநேர பிஎச்.டி. பட்டதாரிகள் ஏமாற்றம்

உதவி பேராசிரியர்கள் பணியிட நியமனத்திற்கு மதிப்பெண்கள் வழங்குவதில் பகுதி நேர பிஎச்.டி. படித்து பணிபுரிந்த அனுபவத்திற்காக கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதால் முழுநேர படிப்பாக பிஎச்.டி., முடித்தவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தமிழக அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 1,093 பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்தது. இதற்காக, தமிழகத்தில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தனர். அவர்கள், சென்னையில் உள்ள மூன்று அரசு கல்லூரிகளில் கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி முதல் டிசம்பர் 6ம் தேதி வரை சான்றிதழ்கள் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டனர்.
மொத்த மதிப்பெண்களில் 24 மதிப்பெண்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக ஒதுக்கப்பட்டது. அதற்கான, மதிப்பெண்கள் பட்டியல் அண்மையில் இணையதளத்தில் வெளியானது. சான்றிதழ் சரி பார்ப்பில் பிஎச்.டி. முடித்தவர்களுக்கு 9 மதிப்பெண்களும், பணியாற்றிய அனுபவத்திற்காக ஆண்டுக்கு தலா 2 மதிப்பெண்கள் வீதம் அதிகபட்சமாக 7.5 ஆண்டுகளுக்கு 15 மதிப்பெண்கள் என, வரையறுக்கப்பட்டுள்ளன.
தனியார் கல்லூரியில் பேராசிரியர்களாக பணியாற்றும் போதே பகுதி நேரத்தில் பிஎச்.டி., படிப்பவர்கள் உள்ளனர். இதில், ஏதேனும் ஒரு தகுதியை மட்டுமே மதிப்பெண்ணுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, விண்ணப்ப மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், தேர்வு வாரியம் அனுபவத்திற்காக 15 மதிப்பெண்கள் மற்றும் பகுதி நேர பிஎச்.டி. பெற்றவர்களுக்கு 9 மதிப்பெண்களும், முழுமையாக வழங்கியுள்ளது. பகுதி நேரமாக பிஎச்.டி., படித்தவர்களுக்கு முழு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதால் வரிசைப் பட்டியலில் அவர்கள் முன்னணி வகித்துள்ளனர். இதனால், முழுநே, பிஎச்.டி. படிப்புப் படித்தவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment