Friday, November 14, 2014

இடைத்தேர்வில் பிளஸ் 1 மாணவர்கள் குழப்பம்

மதுரை மாவட்டத்தில் பிளஸ் 1 இரண்டாம் இடைத்தேர்வு வினாத்தாளில் குறிப்பிட்ட பாடங்களை தவிர பிற பாடங்களில் இருந்தும் வினாக்கள் கேட்கப்பட்டதால் மாணவர்கள் குழப்பமடைந்தனர்.

காலாண்டு தேர்வுக்கு பின் நவ.,10ல் இரண்டாம் இடைத்தேர்வு துவங்கியது. இதில் பிளஸ் 1க்கு நடத்தாத பாடங்களில் இருந்தும் வினாக்கள் இடம்பெற்றன. குறிப்பாக தமிழ் முதல் தாளில் சீறாப்புராணம், குயில்பாட்டு, கலிங்கத்துபரணி ஆகிய பகுதிகளை தாண்டி ’பிள்ளைத்தமிழ்’ பகுதியில் இருந்தும் வினாக்கள் இடம்பெற்றன.
இயற்பியலில் ஐந்தாவது (திடவாயு பொருட்களில் இயந்திரவியல்) மற்றும் ஆறாவது (அலைவுகள்) பாடங்களில் மட்டும்தான் வினாக்கள் கேட்க வேண்டும். ஆனால், ஏழாவது பாடமான ’அலை இயக்கம்’ பாடத்தில் இருந்தும் வினாக்கள் இடம்பெற்றன. இப்பாடம் இன்னும் ஆசிரியர்களால் நடத்தப்படவில்லை.
நேற்று நடந்த கணக்குப்பதிவியியலிலும் ஏழாவது பாடம் ரொக்க ஏடு, எட்டாவது பாடம் சில்லரை ரொக்க ஏடு மற்றும் ஒன்பதாம் பாடம் வங்கி சரிக்கட்டும் பட்டியல் ஆகிய பாடங்களை தவிர முதல் ஒன்று முதல் ஆறாம் பாடங்களில் இருந்தும் தேவையின்றி வினாக்கள் இடம் பெற்றன. இதனால் மாணவர்கள் சிரமப்பட்டனர்.
ஆசிரியர்கள் கூறுகையில், ‘இடைத்தேர்வு என்பது ஒரு குறிப்பிட்ட பாடங்களில் இருந்து மட்டும் வினாக்கள் கேட்கப்பட்டு மாணவர்களின் திறனை சோதிக்க வேண்டும். ஆனால் வினாத்தாள் குழு அனைத்து பாடங்களில் இருந்தும் வினாக்கள் கேட்டு குழப்பத்தை ஏற்படுத்தி சொதப்பியுள்ளது,‘ என்றனர்.

No comments:

Post a Comment