Tuesday, November 11, 2014

பாடத்திட்டங்களை டிசம்பர் 7க்குள் முடிக்க கட்டாயப்படுத்தும் கல்வித்துறை

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கான மொத்த பாடத்திட்டத்தையும், டிசம்பர் 7க்குள் முடிக்குமாறு கல்வித்துறை கட்டாயப்படுத்துவதால், ஆசிரியர்கள் திணறுகின்றனர்.

இக்கல்வியாண்டில் ஜூன் மாதம் பள்ளி திறக்கப்பட்டது. வரும் டிச., மாதம் அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளது. மார்ச் மற்றும் ஏப்., மாதங்களில் முழு ஆண்டுத்தேர்வும், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வும் நடைபெறும். மே மாதம் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிப்பது வழக்கமாக உள்ளது.
சமச்சீர் கல்வி திட்டம் வந்தபின், தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள் அச்சிட்டு தேர்வு நடத்தும் முறை, இரண்டு ஆண்டுகளாக அமலில் உள்ளது. தற்போது டிசம்பர் 10ம் தேதி பிளஸ் 2வுக்கும், 12ம் தேதி பத்தாம் வகுப்புக்கும் அரையாண்டு தேர்வு துவங்குகிறது. அதனால், டிசம்பர் 7க்குள் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மொத்த பாடங்களையும் நடத்தி முடிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சில பள்ளிகளில் பணியிடம் காலி, உடல்நல பாதிப்பு, கர்ப்ப கால மருத்துவ விடுப்பு போன்ற காரணங்களால் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. ஜூன் மாதம் பள்ளி துவங்கிய நிலையில், டிசம்பர் முதல் வாரத்துக்குள் ஆறே மாதங்களில் முழு பாடங்களையும் நடத்தி முடிப்பது, ஆசிரியர்களுக்கு சிரமமாக உள்ளது. சில பள்ளிகளில், ஆசிரியர்கள் வேகமாக பாடங்களை நடத்தி முடிப்பதாக, மாணவர்கள் மத்தியில் புகார் நிலவுகிறது.
தலைமை ஆசிரியர் ஒருவரிடம் கேட்டபோது, "அரையாண்டு தேர்வுக்கு முன்னதாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளின் மொத்த பாடத்திட்டத்தையும் முடித்தால் மட்டுமே, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அவர்களுக்கு திருப்பு தேர்வு, முன்மாதிரி தேர்வு நடத்தி, பொதுத்தேர்வுக்கு தயார்படுத்த முடியும்.
அவகாசம் குறைவாக உள்ளதால், காலையில் ஒரு மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரம், கூடுதல் நேரம் வகுப்பு நடத்தப்படுகிறது. சில நேரங்களில் பாடங்களை விரைவாக நடத்த வேண்டிய நெருக்கடியும் ஆசிரியர்களுக்கு ஏற்படுகிறது. காலாண்டு தேர்வுக்குள் 65 சதவீதம், அரையாண்டு தேர்வுக்குள் 35 சதவீதம் என, கல்வித்துறையின் அட்டவணையை பின்பற்றினால், இந்த சிரமம் ஏற்படாது" என்றார்.

No comments:

Post a Comment