Thursday, November 6, 2014

பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா பொருட்களின் தரம் குறித்து ஆய்வு

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும், விலையில்லா பொருட்களின் தரம் குறித்து, கல்வித்துறை ஆய்வுக்குழு சோதனை மேற்கொண்டுள்ளதால், நலத்திட்டங்களின் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, விலையில்லா புத்தகம், காலணி, புத்தகப்பை, வண்ணப்பென்சில், வரைபடம், கிரயான்ஸ், சைக்கிள், ஜாமெமன்ட்ரி பாக்ஸ், சீருடை உட்பட பதினான்கு பொருட்கள், வகுப்பு வாரியாக, அரசின் சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

நடப்பு கல்வியாண்டில், மாணவர்களுக்கு புத்தகம், சைக்கிள் மற்றும் லேப் --டாப் போன்ற நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இக்கல்வியாண்டில் வழங்க வேண்டிய, பொருட்களின் தரம் குறித்து, ஆய்வு நடத்த, கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதனால், பொருட்களை மாணவர்களுக்கு வினியோகிப்பது, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: புத்தகப்பை, கிரயான்ஸ், காலணி உள்ளிட்ட மூன்று பொருட்கள், இரண்டாவது பருவத்தில் மாணவர்களுக்கு வழங்க, மாவட்ட கல்வித்துறை அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநில அளவில் விலையில்லா பொருட்களின் தரத்தை சோதனை செய்ய, அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவின் சார்பில், மாவட்ட கல்வி அலுவலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள, பொருட்களின் மாதிரிகள் (சாம்பிள்) சோதனைக்கு சென்னை கொண்டு செல்லப்பட்டுள்ளது.
’இப்பொருட்கள் ஆய்விற்கு பின்னரே, வழங்கப்பட வேண்டும்’ என்ற உயர்அதிகாரிகளின் அறிவிப்பால், பொருட்களின் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மறுஉத்தரவு வந்தவுடன், இம்மாத இறுதிக்குள் மாணவர்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment