Friday, November 14, 2014

பள்ளிகளுக்கு மீண்டும் அகராதி; குழப்பத்தில் தலைமை ஆசிரியர்கள்

இடைநிலைக் கல்வி திட்ட (ஆர்.எம்.எஸ்.ஏ.,) பள்ளி பராமரிப்பு நிதியில் இருந்து அரசு உயர், மேல்நிலை பள்ளிகளுக்கு மொழிஅகராதி கள் வருகையால் தலைமை ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு இடைநிலைக் கல்வி திட்டம் மூலம் பராமரிப்பு நிதியாக 50 ஆயிரம் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்நிதி மூலம் ரூ.10 ஆயிரத்தில் நூலகத்திற்கான புத்தகங்கள், ரூ.25 ஆயிரத்தில் ஆய்வக உபகரணங்கள், ரூ.15 ஆயிரத்தில் மின் கட்டணம், செய்தி தாள்கள் வாங்குதல் உட்பட செலவுகளை மேற்கொள்ளலாம்.
இந்நிலையில் 2014 -15 ஆண்டுக்கான நிதியில் இருந்து தமிழ், ஆங்கில அகராதிகள், சில பதிப்பகங்கள் சார்பில் அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்படுகின்றன. இந்த அகராதிகள் ஏற்கனவே பள்ளிகளில் உள்ளன. இந்நிலையில் மீண்டும், பதிப்பகங்கள் மூலம் வழங்குவது புரியாத புதிராக உள்ளது.
கடந்த ஆண்டுகளில் நூலகத்திற்கான புத்தகங்களை தலைமை ஆசிரியர்களே வாங்கினர். இந்த ஆண்டு பதிப்பகத்தின் மூலம் நேரடியாக அனுப்பப்படுவதால் தலைமை ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: கல்வித் துறையின் உயர் அதிகாரிகள் சிலர், பதிப்பகங்களில் தொடர்பு வைத்துக் கொண்டு மொழி அகராதிகளை கொள்முதல் செய்து பள்ளிகளுக்கே நேரில் அனுப்பி இருக்கலாம். அகராதிகள் ஏற்கனவே நூலகங்களில் இருக்கும் நிலையில் மீண்டும் அவற்றை வாங்கவேண்டிய அவசியம் இல்லை. இவற்றிற்கு ரசீது சமர்ப்பிப்பதில் எங்களுக்கு சிக்கல் ஏற்படும். இவ்வாறு கூறினர்.
மாவட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், ’ஆர்.எம். எஸ்.ஏ., திட்ட பள்ளி பராமரிப்பு நிதியை அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கி விடுவோம். தலைமை ஆசிரியர்களே நிதியை செலவிடுவர். இந்த ஆண்டுக்கான நிதியில் இருந்து எங்களுக்கே தெரியாமல் மொழி அகராதிகள், பதிப்பகங்களில் இருந்து தபாலில் வந்துள்ளது. அதற்கான நிதி வருவதற்குள் புத்தகம் வந்துள்ளது ஆச்சரியம் அளிக்கிறது’ என்றார்.

No comments:

Post a Comment