Monday, November 10, 2014

ஸ்மார்ட் கார்டு தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை: தலைமையாசிரியர்கள் புகார்

பள்ளி மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிவித்து, மூன்று ஆண்டுகள் நிறைவுபெற்றும், இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. புள்ளி விபரங்களை தொகுத்து அளிக்கும் பணியில், காலம் விரயமாவதாக பள்ளி தலைமையாசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 2,234 அரசு உயர்நிலைப் பள்ளிகளும், 543 உதவிபெறும் உயர்நிலைப் பள்ளிகளும், 2,388 அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் 1,044 உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட, 1.32 கோடி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களின் பெயர், பெற்றோர் விபரம், குடும்ப வருமானம் உள்ளிட்ட சுய விபரங்களும், பள்ளியில் இவர்களின் மதிப்பெண்கள், ஒழுக்க நடவடிக்கை, விளையாட்டில் ஆர்வம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் பதிவேடுகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இத்தகவல்களை, கம்ப்யூட்டர்மயமாக்கி, மாணவ, மாணவியருக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று கடந்த 2011 அக்., மாதம் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, மாணவர்களின் அனைத்து விபரங்களும் பல மாதங்களாக தலைமையாசிரியர்கள் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளின் அறிவிப்பின்படி, இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர். புள்ளிவிபரங்களை தொகுக்கும் பணி இதுவரை முடிந்த பாடில்லை என்று தலைமையாசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
அரசு அறிவித்தபடி, ஸ்மார்ட் கார்டு வழங்கும் பட்சத்தில் பொதுத்தேர்வு சமயங்களிலும், கல்வி ஆண்டு துவக்கம், மாணவர்கள் சேர்க்கை, பஸ் பாஸ், நலத்திட்ட வினியோகம் உள்ளிட்ட பல்வேறு விதங்களில் மாணவர்களின் பல்வேறு புள்ளி விபரங்களை தொகுக்க வேண்டிய அவசியமில்லை. தலைமையாசிரியர்களும் பெரும் தலைவலியை தவிர்த்து, கல்வியின் தரத்தை மேம்படுத்தி மாணவர்களின் நலனில் கவனம் செலுத்த இயலும்.
தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், "மாணவர்கள் பற்றி புள்ளி விபரங்களை ஆண்டு முழுவதும் தொகுத்து வழங்கி வருகிறோம். மீண்டும், மீண்டும் ஒரே புள்ளி விபரங்களை வெவ்வேறு திட்ட செயல்பாடுகளுக்கு கேட்கின்றனர். இதனால், ஆசிரியர்களுக்கும் முழுமையாக கல்விப்பணியை செய்ய இயலாமல் உள்ளது. ஸ்மார்ட் கார்டு வழங்கும் பட்சத்தில், பல்வேறு பிரச்னைகள் தவிர்க்கப்படும். ஸ்மார்ட் கார்டு வழங்க தேவையான விபரங்களை அளித்தும் பயனில்லை" என்றார்.
ஸ்மார்ட் கார்டு எப்படி இருக்கும்?
மாணவரின் பெயர், வண்ணப் புகைப்படம், தந்தை பெயர், வீட்டு முகவரி, படிக்கும் வகுப்பு, ரத்தப் பிரிவு, 16 இலக்க அடையாள எண், சமூகநிலை, தலைமை ஆசிரியரின் கையெழுத்து, எல்லாவற்றுக்கும் மேலாக ரகசிய குறியீடு (பார்கோடு) இந்த அட்டையில் இடம்பெற்றிருக்கும். அதில் உள்ள ரகசிய குறியீட்டின்படி, சம்பந்தப்பட்ட மாணவன் அல்லது மாணவியின் முழு விவரங்களையும் ஆசிரியர்கள் தெரிந்து கொள்ளலாம்.
மாணவர்கள் ஒரு பள்ளியில் சேர்ந்து இடையில் படிப்பை நிறுத்திவிட்டு, பின்னர் வேறு பள்ளியில் சேர்ந்துவிடுவதால் ஏற்படும் இரட்டைப்பதிவு இந்த ஸ்மார்ட் கார்டு மூலம் தவிர்க்கப்படும். தொழில் காரணமாக அடிக்கடி இடம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்களின் குழந்தைகள் எளிதாக மற்ற பள்ளிகளில் சேருவதற்கும் இது உதவிகரமாக இருக்கும். இதில் உள்ள தகவல்களை ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொண்டே வரலாம்.

No comments:

Post a Comment