Thursday, November 6, 2014

காலாண்டு தேர்வு மதிப்பீட்டு பணிகள் தீவிரம்

கோவை: மாவட்ட பள்ளிகளில், காலாண்டு தேர்வு முடிவுகள் குறித்த மதிப்பீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அரசுப் பள்ளிகளில், படிக்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள், பள்ளிக் கல்வித்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாலை நேர சிறப்பு வகுப்புகள், வழிகாட்டி கையேடுகள், பாட ஆசிரியர்களுக்கு பயிற்சி, கற்றல் குறைபாடுள்ள மாணவர்கள் மீது சிறப்பு கவனம் என பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

அடுத்த கட்டமாக, ’காலாண்டு தேர்வில் 60 சதவீதத்திற்கும் குறைவாக பெறும் பள்ளிகளின் மீதும், தலைமையாசிரியர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, மதிப்பீட்டு பணிகள் தீவிரமாக நடக்கிறது.
மதிப்பீட்டு பணிகள் நிறைவு பெற்றதும், தேர்ச்சி விகிதம் குறைவு, மாணவர்கள் மதிப்பெண் குறைந்ததற்கான காரணம் அனைத்தும் ஆய்வு செய்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு அறிக்கை அனுப்பப்படவுள்ளது. கோவை மாவட்டத்தில், காலாண்டு தேர்வு ஆய்வின் முடிவில், பத்தாம் வகுப்பில் மாவட்ட சராசரி தேர்ச்சி விகிதம் 73.75 சதவீதமாகவும், பிளஸ் 2 வகுப்பில் 80.38 சதவீதமாகவும் உள்ளது.
கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், ”காலாண்டு தேர்வு முடிவுகளை கொண்டு, பொதுத்தேர்வு முடிவுகளை நிர்ணயிக்க இயலாது. இத்தேர்வு முடிவுகளை கொண்டு மாணவர்களின் நிலையை உணர்ந்து எளிதாக தயார்படுத்த இயலும். இதன் காரணமாகவே மதிப்பீட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
மதிப்பீட்டு பணிகளின் விபரம் சென்னைக்கு அனுப்பப்படவுள்ளது. மேலும், கோவை மாவட்டத்தில், 60 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி விகிதம் பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. காலி பணியிடங்களில் ஆசிரியர்கள் பணிநியமனம், கற்றல் குறைபாடுள்ள மாணவர்கள் மீது தனி கவனம் என பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது,” என்றார்.

No comments:

Post a Comment