Tuesday, January 7, 2014

பத்தாம் வகுப்புத் தேர்வு நேரத்தை மாற்றக் கோரி பிப்ரவரி 5-ல் ஆர்ப்பாட்டம்

பத்தாம் வகுப்புத் தேர்வு நேரத்தை மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் பிப்ரவரி 5-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி கூறியது:
வரும் மார்ச் மாதம் நடைபெறும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு காலை 9.15 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது கிராமப்புற மாணவர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், இதனை மாற்றி, வழக்கமான முறையில் காலை 10 மணிக்கு தேர்வுகளைத் தொடங்க வேண்டும்.
முப்பருவக் கல்வி முறையை அடுத்தக் கல்வியாண்டு (2014-15) முதல் பத்தாம் வகுப்பில் அறிமுகப்படுத்தினாலும், அந்த வகுப்பில் பொதுத்தேர்வு முறை தொடர்ந்து நீடிக்க வேண்டும்.
அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் வட்டாரவள மைய மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்தவர்கள் பள்ளிக் கல்வித்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. சிறப்பாகப் பணியாற்றி வந்த அனைவரையும் மீண்டும் அதே பணிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.
மத்திய அரசுக்கு இணையான ஊதியம், அதிக எண்ணிக்கையிலான மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் முன்பு பிப்ரவரி 5-ஆம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.

No comments:

Post a Comment