மேலூர் அருகே கொடுக்கம்பட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. நடுநிலைப் பள்ளியாக இருந்த இப்பள்ளி 2009ல் தரம் உயர்த்தப்பட்டது. நடுநிலை பள்ளியாக இருந்த வரை மாணவர்களுக்கு இருக்கும் வகுப்பறைகள் போதுமானதாக இருந்தது. தரம் உயர்ந்து மற்ற வகுப்புகள் அதிகரித்த போது அதற்கான தனி வகுப்பறைகள் கட்டப்படவில்லை.
இதனால் வேறு வழியின்றி, சில வகுப்புகள் மரத்தடியில் நடக்க ஆரம்பித்தது. இப்பள்ளி ஊருக்கு நடுவில் உள்ள மந்தையில் அமைந்துள்ளதால் எப்போதும் இவ்விடம் பரபரப்பாக இருக்கும். இதே இடத்தில்தான் வி.ஏ.ஓ., அலுவலகம், ஊராட்சி அலுவலகம், கால்நடை மருத்துவமனை செயல்படுகிறது.
கிராமத்தில் நடக்கும் விசேஷங்கள் இந்த மந்தையில் இருந்தே துவங்குகிறது. சீர்வரிசை துவங்கும் அந்த நேரங்களில் மேளச் சத்தம் பள்ளி மாணவர்களின் கவனத்தை சிதறடித்து விடுகிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலான பிரச்னை, இப்பள்ளி முன் நடக்கும் வாரச்சந்தை தான். சனிக்கிழமை தோறும் கூடும் இச்சந்தை மாணவர்கள் அமரும் அந்த மரத்தடியில் தான் நடக்கும்.
பெரும்பாலும் சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் பிரச்னை இருக்காது. கடந்த வாரம் சனிக்கிழமை பள்ளி நடந்த போது அங்கு வந்த காய்கறி கடைக்காரர்கள், ஆசிரியர்களிடம் சண்டை போட்டனர். "தாங்கள் கடை போடும் இடத்தில் எப்படி வகுப்புகளை நடத்தலாம்" என அவர்கள் சத்தம் போட்டதில் ரோட்டில் அமர்ந்திருந்த மாணவர்களை ஆசிரியர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
புதிய கட்டடம் கட்டினால் மட்டுமே இந்த பள்ளி மாணவர்களின் பிரச்னை நிரந்தரமாக தீரும் என தெரிகிறது. கல்வி அதிகாரிகள் வெயிலில் வாடும் மாணவர்களின் நலன் கருதி தற்காலிக மாற்று ஏற்பாடுகளை செய்ய முன் வர வேண்டும்.
No comments:
Post a Comment