Thursday, September 26, 2013

10ம் வகுப்பு வினா – விடை புத்தகம் அடுத்த வாரம் விற்பனை

பத்தாம் வகுப்பு, வினா – விடை புத்தகங்கள், அடுத்த வாரத்தில் இருந்து, விற்பனைக்கு வருகின்றன.

பள்ளி கல்வித் துறையின் கீழ் இயங்கும், மாநில பெற்றோர் – ஆசிரியர் கழகம், பொதுத் தேர்வு எழுதும், மாணவ, மாணவியருக்காக, பல ஆண்டுகளாக, வினா – விடை புத்தகங்களை தயாரித்து, குறைந்த விலைக்கு, விற்பனை செய்து வருகிறது. பாட புத்தகங்களை தயாரித்த ஆசிரியர் குழுவே, வினா – விடை புத்தகங்களையும் தயாரிப்பதால், இது, மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது.
டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, மாநில, பெற்றோர் – ஆசிரியர் கழக அலுவலகத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கான, வினா – விடை புத்தகம், விற்பனை செய்யப்படுகிறது. பத்தாம் வகுப்பிற்கான புத்தகங்கள், அடுத்த வாரத்தில் இருந்து, விற்பனைக்கு வந்துவிடும் எனவும், மாணவ, மாணவியரின் தேவைக்கு ஏற்ப, போதுமான அளவில், புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ் வழி புத்தகங்கள், ஒரு, "செட்" – 185 ரூபாய்க்கும்; ஆங்கில வழி புத்தகங்கள், 180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த புத்தகங்கள், சென்னையில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், மாநிலம் முழுவதிலும் இருந்து, பெற்றோர், சென்னைக்கு படை எடுக்கும் நிலை, பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
"மாவட்ட தலைநகரங்களில், வினா – விடை புத்தகங்களை விற்பனை செய்ய, கல்வித் துறை ஏற்பாடு செய்ய வேண்டும்" என பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், என்ன காரணத்தினாலோ, இதுவரை, கல்வித் துறை நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறது.

No comments:

Post a Comment