Thursday, September 26, 2013

தமிழாசிரியர் நியமன தேர்வில் பிழை: ஐகோர்ட் இன்று உத்தரவு

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணி நியமன தேர்வில் அச்சுப்பிழையுள்ள கேள்விகள் இடம்பெற்றதால், மாற்று வழிமுறைகள் குறித்து, மதுரை ஐகோர்ட் கிளை இன்று(செப்., 25) உத்தரவிடுகிறது.
மதுரை புதூர் விஜயலட்சுமி தாக்கல் செய்த மனு: முதுகலை பட்டதாரி
தமிழாசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் ஜூலை 21 ல் தேர்வு நடந்தது. "பி&' வரிசை வினாத்தாள்களில் சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுத 150 கேள்விகள் இருந்தன. 47 கேள்விகளில் அச்சுப்பிழைகள் உள்ளன. அச்சுப்பிழை கேள்வி விடைகளுக்கு, முழு மதிப்பெண் வழங்க வேண்டும். தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும், என குறிப்பிட்டார்.
ஏற்கனவே நீதிபதி, "தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்கப்படுகிறது. இதில் 8002 பேருக்கு அச்சுப்பிழையுள்ள வினாத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளது. மறுதேர்வு நடத்துவது குறித்து அரசிடம் விபரம் பெற்று தெரிவிக்க வேண்டும்" என்றார்.
இதுபோல், திருச்சி அந்தோணி கிளாரா மற்றொரு மனு செய்தார். நீதிபதி எஸ்.நாகமுத்து முன், நேற்று மனுக்கள் விசாரணைக்கு வந்தன.
அரசு வக்கீல்: மறுதேர்வு நடத்தினால் காலவிரையம், பல்வேறு சிக்கல்கள் ஏற்படும்.
நீதிபதி: 30 ஆயிரம் பேருக்கு மறுதேர்வு நடத்துவது சிக்கலானதுதான். மூன்றில் ஒரு பங்கு வினாக்கள் பிழையாக உள்ளன. இது, டி.ஆர்.பி.,யின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது. இம்மாதிரி சூழ்நிலையில் மறு தேர்வு நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற வழக்கில், சுப்ரீம் கோர்ட் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இது, நாளை (இன்று) இவ்வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் போது, கவனத்தில் கொள்ளப்படும், என்றார்.

No comments:

Post a Comment