Wednesday, September 18, 2013

அங்கன்வாடி குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு புதிய பாட திட்டம் : மாற்றப்பட்ட கல்வித்திட்டம் எளிமையானது


கோவை மாவட்டத்திலுள்ள அங்கன் வாடி குழந்தைகளுக்கு, கற்பிக்கும் முறையில், மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 1,688 அங்கன் வாடிமையங்கள் செயல்படுகின்றன. இங்கு 10,000க்கும் மேற்பட்ட ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பிக்கப்படுகிறது. இதில் மொழியறிவு, கணிதம் மற்றும் அறிவியல் பாடம் கற்றுத்தரப்பட்டது.
இது வரை ஒரே மாதிரியான பாடத்திட்டத்தில் கல்வி பயிற்றுவிப்பதற்கான உபகரணங்களை கொண்டு அங்கன்வாடிப்பணியாளர்கள், குழந்தைகளுக்கு கல்வி போதித்து வந்தனர். கல்வி பயிற்றுவிக்கப்பட்டபின் மீதமுள்ள நேரங்களில், விளையாட்டுகள் கற்றுத்தரப்பட்டது. இவற்றோடு ஆடல், பாடல், நடனம் ஆகியவைவும் கற்றுத்தரப்பட்டது.இந்நடைமுறையை மாற்ற அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தலைப்பின் கீழ் பாடத்தை முழுமையாக குழந்தைகளுக்கு கற்றுத்தரப்படும் முறை அமலுக்கு வந்துள்ளது.
அதன் படி வாழ்க்கையில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளையும், காணும் காட்சிகளையும் விரிவாக அறிந்து கொள்ளும் வகையில் செயல்முறை கருவிகளுடன் மாதம் தோறும் ஒவ்வொரு தலைப்புகளுடன் அங்கன் வாடி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது.முதல் மாதமான ஜனவரில் முக்கிய திருவிழாக்கள் அதன் சிறப்பு அம்சங்கள் பற்றிய தகவல்கள் குழந்தைகள் தெரிந்து கொள்ளும் வகையில், உபகரணங்களோடு கற்றுத்தரப்படுகிறது. பொங்கல் விழாவை , சிறு மண் பானையில் பஞ்சினை வைத்து பொங்கல் பானை போல் குழந்தைகள் அலங்கரித்து பொங்கல் விழாவை நினைவூட்டுகின்றனர். பிப்., யில் பருவகாலங்கள் குறித்தும், மார்ச்சில் மிருகக்காட்சி சாலை மற்றும் விலங்குகள் குறித்தும், ஏப்ரல் மாதத்தில் பூச்சிகளை பற்றியும், மே மாதத்தில் நாம் உட்கொள்ளும் உணவுகளை பற்றியும், ஜூன் மாதத்தில் என் கிராமம் என்ற தலைப்பில் கிராம சூழல் குறித்தும், ஜூலை மாதத்தில் பழங்கள், காய்கறிகளை பற்றியும், ஆகஸ்ட் மாதத்தில் மரம், செடி, கொடி பற்றியும் செப்., மாதத்தில் உள்ளூர் திருவிழா பற்றியும், அக்டோபர் மாதத்தில் பொம்மைகளை பற்றியும், நவம்பர் மாதத்தில் போக்குவரத்து பற்றியும், டிசம்பரில் உள் மற்றும் வெளி விளையாட்டரங்கம் குறித்து கற்றுத்தரப்படுகிறது. இந்நடைமுறை கோவையிலுள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட திட்டஅலுவலர் (சத்துணவு) மணிமேகலை கூறியதாவது: மாவட்டத்திலுள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களில் படிக்கும் குழந்தைகள் அனைத்து தகவல்களையும் ஒருங்கே பெற வேண்டும். பள்ளிப்பருவத்துக்கு முன்பே, கல்வியில் நல்ல வளர்ச்சியை பெற வேண்டும் என்பதற்காக அரசு இப்புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு படிப்புடன், நடைமுறை வாழ்க்கையை பற்றிய, கல்வி முறையை தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment